கிரானைட் முறைகேடு: இரண்டாம் கட்ட விசாரணையை தொடங்கினார் சகாயம் - மனு கொடுத்த 4 போலீசார்
மதுரை: மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மதுரையில் 2ஆம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் புகார் மனுக்களை பெற்று வருகிறார் அதிகாரி சகாயம் அவர்கள். முதல் மனுவாக அதிகாரி சகாயத்திடம் 4 காவலர்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, செம்மினிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 86 கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரத்து 338 கோடி இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த முறைகேடு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அறிவியல் துணை நகரத்தின் இயக்குநர் சகாயத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சகாயம் டிசம்பர் 3ஆம் தேதி மதுரையில் விசாரணையை துவக்கினார்.
முதல் நாள் கனிமவளம், வேளாண்மை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். டிசம்பர் 4ஆம் தேதி கிரானைட் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து அவர் மனுக்களை பெற்றார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறியபடி அவரிடம் மனு கொடுத்தனர். மொத்தம் 109 மனுக்களை பெற்றார்.
சிறுமி நரபலி
கிரானைட் குவாரியில், 7 வயது சிறுமி ஒருவரை, நரபலி கொடுத்து உள்ளனர். போலீசார் முறையாக விசாரணை நடத்தவில்லை என்று, இறந்த சிறுமியின் பெற்றோர், புகார் கடந்த முறை மனு கொடுத்து உள்ளனர். இது, சகாயத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து, இம்முறை விசாரிக்க, சகாயம் திட்டமிட்டு உள்ளார்.
மனுக்கள் மீது ஆய்வு
மதுரையில், மூன்று நாட்கள் மனுக்கள் வாங்கிய சகாயம் தனக்கு ஒத்துழைக்காத அதிகாரிகளை நீக்கிவிட்டு, சகாயம் சென்னை திரும்பினார். பொதுமக்கள் கொடுத்த மனுக்களை, ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது.
இரண்டாம் கட்ட விசாரணை
இந்த நிலையில் சட்ட ஆணையர் சகாயம் தனது இரண்டாம் கட்ட விசாரணையை இன்று காலையில் தொடங்கினார். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூமாலை வணிக வளகாத்தில் காலை 11 மணி மனுக்களை கொடுக்க ஏராளமான விவசாயிகள் காத்திருந்தனர்.
போலீசார் மனு
இதில் முதல் மனுவாக நான்கு போலீசார் மனு அளித்தனர். மதுரை ஜாங்கிட் நகரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அபகரிப்பு மேலும் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் அபகரித்த தங்கள் நிலங்களை மீட்டுத்தர வேண்டும் என காவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலூர், கீழவளவு, தாமரைப்பட்டியைச் சேர்ந்தர்கள் புகார் அளித்தனர்.
தங்கும் அறை மாற்றம்
முதல்கட்ட ஆய்வின் போது சகாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மதுரை அரசு விருந்தினர் மாளிகைஅறையில் ஒட்டு கேட்பு கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் மற்றொரு அறைக்கு மாறினார். அந்த அறை அமைச்சர் செல்லூர் ராஜு தங்கும் அறை என்று கூறிய அதிகாரிகள், அதையும் காலி செய்யுமாறு கூறி நெருக்கடி கொடுத்தனர். இந்நிலையில் தற்போது அவருக்கு, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வைகாசி விருந்தினர் மாளிகையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.