குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - ஆன்லைனில் நவம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை: தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி 18 ஆம் தேதி என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை (403), மருத்துவம், கிராம சுகாதாரப் பணிகள் (213), பதிவுத் துறை (59), வணிக வரித் துறை (191), சுகாதாரத் துறை (136), பள்ளிக் கல்வி இயக்ககம் (76), தலைமைச் செயலக நிதித் துறை (26), தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (62), மீன்வளத் துறை (45), போக்குவரத்துத் துறை (35) உள்ளிட்ட துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள், கூட்டுறவுத் துறையில் உள்ள இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (308) பணியிடங்கள் என மொத்தம் 1,863 காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பை அக்டோபர் 12 இல் வெளியிட்டது.
இந்தத் தேர்வுக்கு இணையதளம் www.tnpsc.gov.in வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 11 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் நவம்பர் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கிக் கிளைகள் மூலமாக உரிய விண்ணப்ப மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திட கடைசி நாள் நவம்பர் 20 ஆம் தேதி ஆகும்.
இதுதொடர்பான சந்தேகங்களுக்கு contacttnpssc@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரியிலோ அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications