நெல்லை அருகே கோவிலில் புகுந்து சாமி சிலைகள் உடைப்பால் பதற்றம்!!
நெல்லை: திருநெல்வேலி அருகே கோவில் விழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை அருகே உள்ள ஆலங்குளம் காசிநாதபுரத்தில் உள்ள சீவலப்பேரி சுடலை கோவிலில் கொடை விழா நடத்துவது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மணிவேல் தரப்பினருக்கும், விநாயகம் என்பவர் தரப்பினருக்கும் இடையே பிரச்சனை உருவானது.
இது தொடர்பாக கடந்த மாதம் 4-ந் தேதி மணிவேல் தரப்பினர் குடும்பத்துடன் அங்குள்ள குளத்தில் குடியேறினர். இதையடுத்து ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கொடை விழாவை சுமூகமாக நடத்த இரு தரப்பினரும் ஒப்பு கொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 12, 13-ந் தேதிகளில் கோவில் கொடை விழா நடைபெற்றது.
ஆனாலும் வரி வசூலிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிவேல் வீட்டில் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அவர் கொடுத்த புகாரின் பேரில் எதிர்தரப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இதனிடையே மணிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்குள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் நேற்று சாமி கும்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சுறறி வளைத்து சரமாரியாகத் தாக்கியது. இதில் மணிவேல், முத்துவேல், பிச்சையா ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் போது கோவிலில் இருந்த சாமி சிலைகள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.