“மக்களைவிட மன்னார்குடி மாபியா கும்பலுக்கு சக்தி அதிகமா”... குடியாத்தம் மக்கள் போஸ்டர் ஒட்டி கேள்வி
தொகுதி மக்களின் எதிர்ப்பை மீறி சசிகலா ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த குடியாத்தம் எம்எல்ஏவிற்கு தொகுதி மக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
குடியாத்தம்: தொகுதி மக்களின் எதிர்ப்பை விட சசிகலாவிற்கு சக்தி அதிகமா என்று கேள்வி கேட்டு, குடியாத்தம் தொகுதி மக்கள் போஸ்டர் ஒட்டி எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனை கேள்வி கேட்டுள்ளனர்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கனவில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டார்.
இதனால், சசிகலா தனக்கு பதிலாக எடப்பாடி தொகுதி எம்எல்ஏ பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றார். இதற்கு 122 எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது வாக்களித்து ஆதரவளித்துள்ளனர். எம்எல்ஏக்களின் இந்த முடிவை தொகுதி மக்கள் ஏற்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கருப்பு தினம்
குடியாத்தம் எம்எல்ஏ ஜெயந்தி பத்மநாபனும் மக்கள் விரும்பாத செயலையே செய்திருக்கிறார். இதனால் கடுப்பான தொகுதி மக்கள், தமிழகத்தின் கருப்பு தினம் பிப்ரவரி 18 என்று போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.
சசிகலாவிற்கு ஏன் ஆதரவு?
"மக்கள் எதிர்ப்பை மீறி சசிகலா வகையறாவுக்கு ஆதரவை ஏன் அளித்தீர்கள்? எங்கள் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் அவர்களே" என்று கேள்வி கேட்டுள்ளனர் தொகுதி மக்கள்.
ஏன் மதிக்க வேண்டும்?
மேலும், "மக்கள் எதிர்ப்பை விட மன்னார்குடி மாபியா கும்பலுக்கு சக்தி அதிகமா? உங்களை ஜெயிக்க வைத்த மக்களையும் நீங்கள் மதிக்கவில்லை. உங்களை சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்திய முதல்வர் ஜெயலலிதாவையும் நீங்கள் மதிக்கவில்லை. உங்களை நாங்கள் ஏன் மதிக்க வேண்டும்" என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எப்படி மனம் வந்தது?
"தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் மர்மம் நிறைந்த மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் உள்ளன என்பது அனைவரும் அறிந்தது. அந்த சந்தேகத்திற்கு மூலகாரணமான மன்னார்குடி மாபியா கும்பலுக்கு எப்படி ஆதரவு அளிக்க மனம் வந்தது உங்களால்" என்று ஜெயலலிதா மரணம் குறித்தும் குடியாத்தம் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்க முடியாது..
"இவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டு மக்கள் மத்தியில் எப்படி வருவீர்கள்.. குடியாத்தம் மக்கள் என்ன மானம் கெட்டவர்களா! உங்களை போல்.. இனி எங்களால் குடியாத்தம் தொகுதியின் சட்டமன்ற உறப்பினராக உங்களை ஏற்க முடியாது" இப்படிக்கு குடியாத்தம் தொகுதி மக்கள் என்ற போஸ்டர் குடியாத்தம் முழுவதும் ஒட்டப்பட்டு எம்எல்ஏ ஜெயந்திபத்மநாபனை கேள்வி கேட்டு வருகின்றனர் தொகுதி மக்கள்.