சென்னையில் பயங்கரம்.... குஜராத் மின் நிறுவன அதிகாரி படுகொலை.. 2 பேர் கும்பல் வெறிச்செயல்
சென்னை: சென்னையில் வசித்து வந்த குஜராத்தைச் சேர்ந்த மின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் நேற்று இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
அவரது பெயர் வெங்கடேஸ்வரலு. 51 வயதான அவர் ஒரு மின் பகிர்மான நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்து வந்தார். நேற்றிரவு 9.30 மணியளவில் மருந்தகத்தில் மருந்து வாங்க வந்த அவரை கண நேரத்தில் குமரன் காலனியில் வைத்து தாக்கியுள்ளனர் மர்ம நபர்கள் 2 பேர்.
அவருக்காக காரில் காத்துக் கொண்டிருந்த டிரைவர் ஆறுமுகம் வெகு நேரமாகியும் வெங்கடேஸ்வரலு திரும்பி வராத காரணத்தினால் சென்று பார்த்து வெங்கடேஸ்வரலு தாக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மருந்துகளை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தபோது, பைக்கில் வந்த இரண்டு பேர் வெங்கடேஸ்வரலு தலையில் பலமாக தாக்கியுள்ளனர். அதனால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வெங்கடேஸ்வரலுக்கு மனைவி சுசித்ரா, சோனு சின்னு என்னும் பொறியியல் படிக்கும் மகனும், சாய் கிருஷ்ணா என்னும் 11 வகுப்பு மாணவனான மகனும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.