இதே உறுதியுடன் இருக்க வேண்டும் விஜயகாந்த்.. எச். ராஜா
திருப்பூர்: தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் விஜயகாந்த். இதே உறுதியுடன் அவர் இறுதி வரை இருக்க வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
விஜயகாந்த்தை கையைப் பிடிக்காத குறைதான். அந்த அளவுக்கு தரையோடு தரையாகப் போய் விழுந்து புரண்டு பார்த்த கட்சி பாஜக. ஆனால் கடைசி வரை போக்கு காட்டி விட்டார் விஜயகாந்த். ரகசியப் பேச்சுக்கள் தொடர்வதாக கூறப்பட்டாலும் கூட, ஆரம்பத்தில் தேமுதிக மீது இருந்த ஈர்ப்பு இப்போது குறைந்து போய் விட்டதாகவே தெரிகிறது.

பாஜக தலைவர்களின் பேச்சும் கூட அதையே உணர்த்துவதாக உள்ளது. இந்த நிலையில் திருப்பூருக்கு வந்த எச். ராஜா அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 2014 தேர்தலில் எங்களோடு இருந்த விஜயகாந்த் தற்போது சட்டசபைத் தேர்தலில் தனியாக நிற்பதாக அறிவித்துள்ளார். அவர் தனியாக நிற்பதில் உறுதியாக இருக்க வேண்டும். கடைசி வரை தனது நிலை மாறாமல் அவர் நடக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக நல்ல செல்வாக்குடன் உள்ளது. பாஜக சார்பில் அனைத்துத் தொகுதிகளிலும் 21-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை மாநாடு நடத்தப்படவுள்ளது.
மக்கள் ஆதரவுடன் பாஜக அதிக வாக்குகளைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெறும். இந்த வாய்ப்பை பாஜகவுக்கு தேமுதிக அளித்துள்ளது. இது பாஜகவுக்கும் செல்வாக்கை நிரூபிக்க நல்லதொரு வாய்ப்பாகும். ஊழல் கூட்டணியை திமுக காங்கிரஸ் அமைத்துள்ளன. இதை மக்கள் நிராகரிப்பார்கள், புறம் தள்ளுவார்கள்.
கடன் பிரச்னையால் அரியலூர் விவசாயி அழகர் தற்கொலைக்கு காரணமான தனியார் நிதி நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் ராஜா.












Click it and Unblock the Notifications