கர்நாடகா அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்..... தமிழிசை- ஹெச்.ராஜா பகிரங்க மோதல்!
சென்னை: கர்நாடகாவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அக்கட்சியின் தேசிய செயலர் ஹெச். ராஜா இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அமைச்சர்கள் வெளிப்படையாக கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவே மதிக்கக் கூடாது என்பதில் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்தகுமார், நிர்மலா சீத்தாராமன் உறுதியாக உள்ளனர்.
இவர்கள் உச்சநீதிமன்றத்துக்கு எதிராக கர்நாடகா அரசு கூட்டுகிற அனைத்து கட்சி கூட்டங்களில் பங்கேற்கின்றனர். தமிழகம், கர்நாடகத்துக்கு இடையே நடுநிலை வகிக்க வேண்டிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியோ பகிரங்கமாக கர்நாடகாவை ஆதரித்து பேசி வருகிறார்.
இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடகாவின் அனைத்து கட்சிக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றது தவறானது. மத்திய அமைச்சர்கள் இப்படி செய்யக் கூடாது என கூறினார்.
ஆனால் பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜாவோ, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அந்த மாநில அரசு கூட்டுகிற அனைத்து கட்சிக் கூட்டத்தில்தானே பங்கேற்கிறார்கள்... இதில் என்ன தவறு இருக்க முடியும்? காவிரி நீர் நமக்குதான் தேவை... நாம்தான் போராடி அதை பெற வேண்டும் என தமிழகத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜகவில் ஆளுக்கொரு கருத்துகளை முன்வைப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது என்கின்றனர் விவசாயிகள்.