ஜல்லிக்கட்டு விவகாரம்.. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மீது எச். ராஜா கடும் தாக்கு !
ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெறாமல் போனதற்கு திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் தான் காரணம் என எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
நாகர்கோவில்: ஜல்லிகட்டுக்கு போராட்டம் நடத்த போவதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருப்பது பச்சை பித்தலாட்டம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், கேரளாவில் கோழிகோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ரூ 201 கோடி பண பரிமாற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இது அங்குள்ள ஆளும் கட்சியான இடதுசாரி கட்சிகளின் முக்கியஸ்தர்கள் மூலமாக தான் இது நடந்திருக்கிறது.
இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத அவர்கள் மத்திய அரசு சபரிமலையில் பக்கதர்களுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகளை நடைமுறை படுத்தாததால் தான் அங்குள்ள பக்கதர்கள் பாதிப்பதற்கு காரணம். என்றும் காவிரி பிரச்சனையாக இருந்தாலும் சரி ஜல்லிகட்டு பிரச்சனையாக இருந்தாலும் சரி அதற்கு காரணம் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சி தான்.
கருப்பு பணத்திற்கு எதிராக போர் நடைபெற்று வரும் வேளையில் வங்கி ஊழியர்களின் சங்க தலைவர்கள் 3 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருப்பது தேசதுரோக செயல். இலங்கை அகதிகள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என பாஜக மட்டும் கூற வில்லை காங்கிரஸ் கட்சியும் முன்னால் கூறி இருக்கிறது.
தமிழகத்திற்கு விடியல் வேண்டுமென்றால் திராவிட கட்சிகள் அஸ்தமணமாக வேண்டும். சோனியா காந்தி, கருணாநிதி உள்ளிட்டோர் இணைந்து ஜல்லிக்கட்டை குழிதோண்டி புதைத்தார்கள் அவர்களின் வீடுகளின் முன்பு போராட்டம் நடத்தினால் கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடைபெறும். ஸ்டாலின் போராட்டம் அறிவித்து இருப்பது பச்சை பித்தலாட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.