ராம்குமாருடன் என்ன தொடர்பு? சுவாதி கொலை குறித்து திருமாவளவனிடம் விசாரிக்க ஹெச். ராஜா வலியுறுத்தல்
சென்னை: சாப்ட்வேர் என்ஜினியர் சுவாதி கொலை வழக்கு பற்றி தொடர்ந்து பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருவதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனிடம் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஹெச். ராஜா கூறியதாவது:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது பற்றி பல்வேறு தகவல்களை திருமாவளவன் கூறிவருகிறார். சுவாதி முஸ்லிமாக மதம் மாற இருந்ததாக அவர் கூறி இருக்கிறார். அவருக்கு இந்த தகவலை சொன்னது யார்? சுவாதி எதற்காக மதம் மாற நினைத்தார்? அவரை மதம் மாற சொன்ன பையன் யார்? இவையெல்லாம் திருமாவளவனுக்கு தெரிந்திருக்கிறது.

இந்துவாக மாற திட்டம்
எங்களுக்கு கிடைத்த தகவல்படி அந்த பையன் இந்துவாக மாறி சுவாதியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்ததாகவும் அதற்காக சைவ உணவுக்கு அவர் மாறியதாகவும் சொல்கிறார்கள். அவர் இந்துவாக மாறிவிடக்கூடாது என்பதற்காக சுவாதியை கொலை செய்துவிட்டதாக பேசுகிறார்கள்.

ராம்குமாருடன் என்ன தொடர்பு?
இப்போது அதை திசை திருப்புவதற்காக திருமாவளவனை பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. ராம்குமாருக்கும் திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு?

புதிது புதிதாக தகவல்கள்...
இந்த கொலை பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. யாரும் எதுவும் பேசாத நிலையில் திருமாவளவன் புதிது புதிதாய் தகவல்களை சொல்கிறார்.

தேவைப்பட்டால் கைது
எனவே இந்த வழக்கில் பல உண்மைகள் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே சுவாதி கொலை தொடர்பாக போலீசார் திருமாவளவனிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஹெச். ராஜா கூறியுள்ளார்.

அன்று மவுனம்...
இதே சுவாதி கொலை வழக்கில் பிலால் மாலிக் என்பவருக்கு தொடர்பிருப்பதாக முதலில் சமூக வலைதளங்களில் செய்தியைப் பகிர்ந்தவர்கள் நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரனும் எஸ்.வி.சேகரும்தான்... அப்போது இருவரிடமும் போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று ஹெச். ராஜா கோரிக்கை விடுக்கவில்லை.. தேவைப்பட்டால் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் ஹெச். ராஜா வலியுறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications