ஐடி புகாருக்குள்ளான விஜய் ஜிஎஸ்டி பற்றி பேசலாமா?- எச்.ராஜா கேள்வி
ஐடி புகாருக்குள்ளான நடிகர் விஜய் ஜிஎஸ்டி பற்றி பேசுவது சரியா என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: வருமான வரி தொடர்பான புகாருக்குள்ளான நடிகர் விஜய் எல்லாம் ஜிஎஸ்டி பேசுவது சரியாக இருக்கிறதா என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மெர்சல் படம் யாரை மெர்சல் ஆக்கியதோ இல்லையோ அதன் வசனங்கள் மூலம் பாஜகவை மெர்சலாகிவிட்டது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இதுகுறித்து எச். ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், வரி குறித்து உபதேசம் செய்பவர்கள் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விஜய் வீடுகளில் ரெய்டு
அப்போதுதான் மக்கள் இவர் நியாயமானவர், இவர் கூறியதில் நியாயம் உண்டு என்று எடுத்துக் கொள்வார்கள். இல்லாவிட்டால் இதையும் சினிமா வசனமாகவே எடுத்துக் கொள்வர். ஜிஎஸ்டி வரி பற்றி பேசியிருக்கும் நடிகர் விஜய் வரி ஏய்ப்பு செய்ததாக அவரது வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரெய்டு நடத்தப்பட்டது.

மோடிக்கு எதிரான சதி
ஐடி ரெய்டு நிழல் பதிந்த ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது ஊடகங்களில் மோடி எதிர்ப்பு சூழலை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாகவும், இதன் பின்னணியில் மோடிக்கு எதிரான குழு செயல்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதால் பொய்யை மட்டும் நான் எதிர்த்துள்ளேன்.

அனுமானத்தில் நியாயம்
தமிழ்நாட்டில் இந்து மதத்தின் மீது தாக்குதல் நடத்தக் கூடிய மத மாற்றும் குரூப் இருக்கிறது. அதனுடைய பின்னணியும், பின்புலமும் விஜய், அட்லிக்கு பின்னாடி இருக்கலாம். இவ்வாறு அனுமானிப்பதிலும் ஒரு நியாயம் இருக்கிறது என்றார் அவர்.

நீக்க முடிவு
மெர்சல் படத்துக்கு எதிராக தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் எதிர் கருத்துகளை ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த படத்தின் காட்சிகள் நீக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications