மலிவான பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார்: அமைச்சர் ஜெயக்குமார்
தனது மலிவான பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : மலிவான பேச்சுகள் மூலம் விளம்பரம் தேடி வரும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிட்ட தனது முகநூல் பதிவில், திரிபுராவில் லெனின் சிலைகள் உடைக்கப்பட்டது போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று பதிவிட்டுருந்தார்.
ராஜாவின் இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியத்தியது. இதனை அடுத்து, அந்தப் பதிவை நீக்கிய எச்.ராஜா தான் அப்படி கருத்து தெரிவிக்கவில்லை என்றும், தனது அட்மின் தனக்குத் தெரியாமல் அதை பதிவிட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால், எச்.ராஜாவைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், இன்று மீண்டும் பெரியார் பற்றிய கருத்து ஒன்றைச் சொல்லி இருக்கிறார் எச்.ராஜா. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், தொடர்ந்து எச்.ராஜா உண்மைக்கு புறம்பான செய்திகளைச் சொல்லி வருகிறார். பெரியார் தமிழை அழிப்பதற்காக திராவிடம் என்கிற வார்த்தையை கொண்டு வந்தார் என்று சொல்லி இருப்பது மிகவும் மலிவானது.
தொடர்ந்து தனது மலிவான பேச்சுகள் மூலம், விளம்பரம் தேடி வரும் எச்.ராஜா விரைவில் சிறைக்குச் செல்வார். இதுபோன்ற நபர்களின் பேச்சுகளை மக்கள் எந்த நிலையிலும் நம்பக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் குறித்து தவறான தகவல்கள் பரப்பி தமிழகத்தில் வன்முறையைச் சூழலை உருவாக்குபவர்கள் யாராக இருந்தாலும், தமிழக அரசு மன்னிக்காது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.