எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த எச். ராஜா- ஓபிஎஸ்க்கு வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பான அரசியல் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று நேரில் சந்தித்து பேசினார்.
அதிமுகவில் அணிகள் இணைப்புக்குப் பிறகு துணைமுதல்வராக பதவியேற்றுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அவரது அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜன் அமைச்சராகியுள்ளார்
ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு அமைச்சர் பதவியா? என்று கேட்டு டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக கடிதம் அளித்துவிட்டு புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ளனர்.
இதனிடையே அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த சூழ்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா இன்று தலைமை செயலகம் வந்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, இந்த சந்திப்பில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்று கூறினார். புதிதாக பொறுப்பேற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை சந்தித்து வாழ்த்து கூறியதாகவும் தெரிவித்தார்.