துர்கேஸ்வரியின் குழந்தைக்கு நான்தான் அப்பா!- முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா ஒப்புதல்
திருச்சி: இளம்பெண் துர்கேஸ்வரிக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நான்தான் என ஒப்புக்கொள்வதாக திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்கார வழக்கில் முன்ஜாமின் கோரியதில் திருச்சி முன்னாள் துணைமேயர் ஆசிக் மீரா ஆஜராகவும், மற்ற இருவர் மதுரை காந்தி மியூசியத்தில் சமூக சேவையில் ஈடுபடவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா தன்னை பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து திருச்சி பொன்மலை போலீஸார் ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), சந்திரபாபு (54), சரவணன் (35) உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
ஆசிக் மீரா, மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகனாவார். அவரது மறைவுக்குப் பின்னர் திருச்சி மாநகராட்சி துணைமேயர் பதவி ஆசிக் மீராவை தேடி வந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குள்ளேயே தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. காரணம் துர்கேஸ்வரி கொடுத்த பாலியல் புகார்தான்.
மக்கள் உரிமைப் பேரவை, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், பெண்கள் எழுச்சி இயக்கம், தமிழ் தேசிய பொது உடைமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆசிக் மீராவுக்கு எதிராக களம் இறங்கின. இதனையடுத்து ஆசிக் மீரா, அவரது உறவினர் மைமூன் சரிபா, நண்பர்கள் சந்திரபாபு, சரவணன் ஆகிய நால்வர் மீது ஆசைவார்த்தை கூறி ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து முன்ஜாமீன் கேட்டு இவர்கள் நால்வரும் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஆசிக்மீரா, துர்கேஸ்வரி இடையில் சமரசம் ஏற்படுத்துவதற்காக இவ்வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை சமரச தீர்வு மையத்துக்கு நீதிபதி அனுப்பி வைத்தார்.

சமரச முயற்சி தோல்வி
அங்கு இரு தரப்பினர் இடையே பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்படாததால், வழக்கு மீண்டும் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், ஆசிக் மீரா உள்பட 4 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தன.

குழந்தைக்கு அப்பா
அப்போது ஆசிக்மீரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துர்கேஸ்வரியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் உறவு கொண்டார் என்ற குற்றச்சாட்டை மனுதாரர் மறுக்கிறார். ஆனால், துர்கேஸ்வரிக்கு பிறந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என மனுதாரர் கூறவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
துர்கேஸ்வரிக்கு பிறந்த பெண் குழந்தையின் தந்தை நான் தான் என தமிழில் மனு ஒன்றை தயாரித்து ஆசிக்மீரா ஜனவரி 21ஆம் தேதி (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் நேரில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது புகார்தாரரான துர்கேஸ்வரியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார்.

முன்ஜாமீன் மறுப்பு
ஆசிக் மீராவுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. மற்ற மனுதாரர்களான மைமூன்சரிபா, சந்திரபாபு, சரவணன் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. மூவரும் திருச்சி 5-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெறலாம்.

காந்தி அருங்காட்சியகத்தில்
மைமூன்சரிபா தேவைப்படும் போது போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சந்திரபாபு, சரவணன் ஆகியோர் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 2 வாரங்கள் தங்கி சேவையாற்ற வேண்டும். இது தொடர்பாக அருங்காட்சியக நிர்வாகி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் மூவரும் சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications