ராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - குற்றவாளி சிக்குவார்களா?
ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

மதுரை: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமஜெயம் மனைவி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது காணாமல் போனார். பிறகு அன்றே அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கை தமிழக குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை விசாரணை செய்துவருகிறது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து விட்டனர் சிபிசிஐடி போலீசார். கொலை நடந்து 5 ஆண்டுகளாகியும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

கொலை நடந்து 5 ஆண்டுகள்
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகள் யாரையும் கைது செய்யவில்லை. ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி அவரது மனைவி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. இதுவரை ரகசிய அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகளின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை.

முதல்வர் விளக்கம்
இந்த வழக்கு தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி சட்டசபையில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், இந்த வழக்கை குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை 12 தனிப்படைகளை அமைத்து விசாரித்துவருவதாகக் கூறிய அவர், தொழில்போட்டி, அரசியல் விரோதம், குடும்பப் பிரச்சனை ஆகியவற்றால் இந்தக் கொலை நடந்திருக்கலாமோ என விசாரித்து வருவதாகக் கூறியிருக்கிறார்.

மொபைல் போன் எண்கள்
இந்த வழக்கில் இதுவரை 1,100 பேருக்கு மேல் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் ராமஜெயத்தைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 294 வாகனங்கள் ஆய்வுசெய்யப்பட்டிருப்பதாகவும் 2910 மொபைல் போன் எண்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றைப் பயன்படுத்தியவர்கள் விசாரிக்கப்பட்டிருப்பதாகவும் பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

நெருக்கமானவர்கள் மவுனம்
ராமஜெயத்திற்கு தொழில்ரீதியாகவும் தனிப்பட்ட வழியிலும் பல விரோதங்கள் இருந்துள்ளன என்றும் இது தொடர்பாக அவருக்கு நெருக்கமானர்கள் கூடுதல் விவரங்களை அளித்தால், அவை விசாரணை செய்யப்படும் என்றும் சட்டசபையில் கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

ரூ. 2 லட்சம் பரிசு
ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இந்த கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ராமஜெயம் மனைவி தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ விசாரணை
3 மாதங்களில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவாளி யார் என்று சிபிஐ விசாரணையில் தெரியவருமா என்பது அந்த ஸ்ரீ ரங்கநாதருக்கே வெளிச்சம்.












Click it and Unblock the Notifications