இரட்டை இருப்பிடச் சான்று அரசாணையில் தெளிவில்லை - ஹைகோர்ட் இடைக்கால தடை
இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணைக்கு ஹைகோர்ட் மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மதுரை : இரட்டை இருப்பிடச் சான்று இருந்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்று வெளியிடப்பட்ட அரசாணைக்கு ஹைகோர்ட் மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நீட் தேர்வில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்ததால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோனதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதே போன்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் பூதாகரமாக வெடித்த மற்றொரு விஷயம் வெளி மாநில மாணவர்கள் இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்து மருத்துவ இடம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது போன்று இரட்டை இருப்பிட சான்றிதழ் அளித்தாக 9 பேரிடம் விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை அமைச்சரும் கூறியிருந்தார். இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ தியாகராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரட்டை இருப்பிட சான்றிதழ் விவகாரம் குறித்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில் இரட்டை இருப்பிட சான்றிதழ் தொடர்பான அரசாணையில் தெளிவு இல்லை என்றும், இரட்டை இருப்பிட சான்றிதழ் இருந்தாலும் மருத்துவ படிப்பில் சேரலாம் என்று சுகாதாரத் துறை வெளியிட்ட அரசாணைக்கு தடை கோரியும் மனு தொடர்ந்திருந்தார்.
இரட்டை இருப்பிட சான்றிதழை அனுமதித்தால் தமிழக மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோனதாகவும் வெளி மாநில மாணவர்களே அதிக அளவில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் தியாகராஜன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன் சுவாமிநாதன் அமர்வு முன்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்ததோடு இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications