மவுலிவாக்கம்: 2வது 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க பிறப்பித்த அரசு உத்தரவுக்கு தடை
சென்னை: மவுலிவாக்கத்தில் 61 பேரின் உயிரைக் குடித்த இடிந்த கட்டிடத்தின் அருகில் உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி 11 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட 61 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம், அடுக்கு மாடி குடியிருப்புகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
இடிந்து விழுந்த கட்டிடம் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாலும், அதில் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாலும், இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
இதேபோன்ற கோரிக்கையுடன், டிராபிக் ராமசாமியும் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான முதலாவது அமர்வில் விசாரிக்கப்பட்டது.
இதற்கிடையே இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டிடத்திற்கு அருகிலேயே அதே நிறுவனம் கட்டிய மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆராய்ந்த தமிழக அரசு அதற்கு சீல் வைத்தது. பின்னர், அக்கட்டிடத்தை இடிக்க வேண்டும் என கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை கடந்த முறை விசாரித்த தலைமை நீதிபதி, சிருஷ்டி நிறுவனம் தொடர்ந்த வழக்கை தன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடும்படி ஹைகோர்ட் பதிவுத்துறைக்கு உத்தர விட்டிருந்தார்.
இந்த நிலையில் அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை வருகிற மார்ச் 17ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். மேலும், சிருஷ்டி கட்டுமான நிறுவனம் கட்டியுள்ள 11 அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று வட்டார வருவாய் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
இந்த கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக சிருஷ்டி நிறுவனத்துக்கு அதிகாரிகள் நோட்டீசு வழங்க வேண்டும். அந்த நோட்டீசுக்கு 2 வாரத்துக்குள் சிருஷ்டி நிறுவனம் பதிலளிக்க வேண்டும். அதன்பின்னர், அவர்களது விளக்கத்தை விரைவாக பரிசீலித்து, தகுந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.