சிறுவன் தில்ஷனை கொன்ற ராணுவ அதிகாரிக்கு ஆயுள் தண்டனை உறுதி!
சென்னை தீவுத்திடல் அருகேயுள்ள இந்திரா காந்தி நகரில் வசித்து வரும் குமார்- இந்திரா மகன் தில்ஷன். இவர்களின் வீடு அருகே ராணுவக் குடியிருப்புப் பகுதி உள்ளது. அங்குள்ள மரத்தில் பழம் பறிப்பதற்காக தில்ஷன் (13) தனது நண்பர்கள் சிலருடன் ராணுவக் குடியிருப்புக்குள் சென்றார். அப்போது யாரோ துப்பாக்கியால் சுட்டதில், சிறுவன் தில்ஷன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.
கடந்த 3.7.2011 அன்று நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இந்நிலையில் தில்ஷனை சுட்டுக் கொன்றதாக ராணுவக் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்
இந்த வழக்கை விசாரித்த சென்னை 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றம், ராமராஜிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமராஜ் மேல் முறையீடு செய்தார்.
இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.