ஒரே நொடி.. மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்! வெடித்து சிதறிய ரயில்.. பறிபோன 24 உயிர்கள்.. திக்திக்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலூசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டுத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு முன்பு நடந்த இந்தத் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குவெட்டாவில் என்ன நடந்தது.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்!
பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் என்பது பல ஆண்டுகளாகவே இருக்கும் ஒரு பிரச்சினை. ஒரு பக்கம் தீவிரவாதிகள் என்றால் இன்னொரு பக்கம் பலூச் போராளிகள் பாகிஸ்தானை நிலைகுலைய வைத்திருக்கிறார்கள். பலூச் போராளிகள் தொடர்ச்சியாக பாகிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.

பாகிஸ்தான் தாக்குதல்
அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. இன்று மே 24ம் தேதி அதிகாலை சுமார் 8 மணியளவில், குவெட்டா ராணுவக் குடியிருப்பில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை ஏற்றிக்கொண்டு பெஷாவர் நோக்கிப் புறப்பட்ட 'ஜாஃபர் எக்ஸ்பிரஸ்' ஷட்டில் ரயில், சாமன் பட்டக் ரயில்வே சிக்னல் அருகே கடந்து கொண்டிருந்தது.
என்ன நடந்தது!
அப்போது, தற்கொலைப் படை பயங்கரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை அதிவேகமாக ஓட்டிவந்து ரயிலின் ஒரு பெட்டி மீது நேருக்கு நேர் மோதி வெடிக்கச் செய்துள்ளான்.. இந்த அசுர வேக வெடிவிபத்தின் தாக்கம் எந்த அளவுக்குக் கொடூரமாக இருந்தது என்றால் வெடிவிபத்தின் பலத்த அதிர்வில் ரயிலின் இன்ஜின் உட்பட மூன்று பெட்டிகள் தடம் புரண்டன; இரண்டு பெட்டிகள் தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பிடித்து எரியத் தொடங்கின.. விண்ணை முட்டும் அளவுக்குக் கரும்புகை சூழ்ந்தது.
அடியோடு சாம்பல்
ரயில்வே தண்டவாளத்திலிருந்து 25 முதல் 30 மீட்டர் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள் அடியோடு எரிந்து சாம்பலாகின. அருகில் இருந்த ஒரு பல்லடுக்குக் குடியிருப்பு கட்டிடத்தின் சுவர்கள் இடிந்து, ஜன்னல் கண்ணாடிகள் சிதறி பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தங்களின் சக வீரர்களையும், குழந்தைகளையும் மீட்புக் குழுவினர் ரத்த வெள்ளத்தில் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் மீட்கும் காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
தற்போது குவெட்டாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த விபத்தில் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என 24 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பொறுப்பேற்பு
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குத் தடை செய்யப்பட்ட அமைப்பான பலூசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army) பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று காலை, பலூசிஸ்தான் விடுதலைப் படையின் தற்கொலைப் படைப் பிரிவான 'மஜீத் பிரிகேட்' (Majeed Brigade), குவெட்டா காண்டோன்மென்ட்டில் இருந்து ஆக்கிரமிப்புப் படைகளின் வீரர்களை ஏற்றிச் சென்ற ரயில் மீது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த ஆபரேஷனுக்கு பிஎல்ஏ முழுப் பொறுப்பேற்கிறது. விரைவில் பாதிப்புகள் குறித்த விரிவான புள்ளிவிவரங்களை வெளியிடுகிறோம்" என்றார்.
எப்போதும் ஆயுதமேந்திய பாதுகாப்புப் படைகளின் கண்காணிப்பில் இருக்கும் அதியுயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது பாகிஸ்தான் உளவுத்துறையின் மிகப்பெரிய தோல்வியாகப் பார்க்கப்படுகிறது.. இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள பலூசிஸ்தான் முதலமைச்சர் சர்ப்ராஸ், "அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. பலூசிஸ்தான் தீவிரவாதிகளை முழுமையாக ஒழிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
என்ன நிலைமை
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் இயற்கை எரிவாயு மற்றும் கனிம வளம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில், பல ஆண்டுகளாகவே பலூச் பிரிவினைவாதிகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் இயற்கை வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுவதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். மேலும், சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டங்களால் தங்களுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்றும் கூறி, அவர்கள் தொடர்ந்து ராணுவத் தளங்கள் மற்றும் சீன உள்கட்டமைப்புகளை டார்கெட் வைத்துத் தாக்குவது தொடர்கதையாகி வருகிறது!












Click it and Unblock the Notifications