3 வாரங்களாக தப்பி ஓடும் எஸ்.வி.சேகர்...முன்ஜாமீன் மனு டிஸ்மிஸ்- இப்போதாவது கைதாவாரா?
எஸ்.வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
Recommended Video
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அத்துடன் அவரை கைது செய்யவும் தடை விதிக்கவில்லை. ஆனாலும் சென்னை போலீசார் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை.
இதனிடையே எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது எஸ்.வி. சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் எந்த நேரத்திலும் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.