ரூ460 கோடி கடன் பாக்கி.. வாசன் கண் மருத்துவமனையை மூடக் கோரும் வழக்கு மீது இன்று விசாரணை
சென்னை: ரூ460 கோடி கடனை திருப்பிச் செலுத்தாத வாசன் கண் மருத்துவமனையை மூடக் கோரும் வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
வாசன் கண் மருத்துவமனனயின் சொத்து மதிப்பு 2014-ஆம் ஆண்டில் ரூ. 5,500 கோடி; அன்னிய முதலீடாக ரூ. 192 கோடியையும் பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. மேலும் ரூ223 கோடி கருப்புப் பண பரிவர்த்தனை விவகாரத்திலும் வாசன் கண் மருத்துவமனை சிக்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த கருப்புப் பண விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாகவும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்வதாக நமது ஒன் இந்தியாவிடம் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் கார்த்தி சிதம்பரம் இதனை மறுத்திருந்தார்.
இந்த நிலையில் ரூ460 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் வாசன் கண் மருத்துவமனையை இழுத்து மூடி அதன் சொத்துகளை விற்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
டெல்லியைச் சேர்ந்த கணேஷ்லால் ஜெயின், சுரேஷ் குமார் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், தங்களிடம் இருந்து பெற்ற கடனை வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் அடைக்க முடியவில்லை; அந்த நிறுவனத்தை மூடவும், அதன் சொத்துகளை விற்று கடன் தொகையை பெறுவதற்கு ஏதுவாக சொத்துத் தீர்வு அதிகாரியை நியமித்து உத்தரவிடவும் வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பாக கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் எனக் கூறியிருந்தார் நீதிபதி.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications