அனேகன் விவகாரம்... தணிக்கைக் குழுவை அணுக சலவைத் தொழிலாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு
தனுஷின் அனேகன் படத்தில் சலவைத் தொழிலாளர்கள் பற்றி வரும் காட்சிகளை நீக்குவது குறித்த வழக்கில், தணிக்கைக் குழுவை அணுகுமாறு மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடு திருக்குறிப்பு தொண்டநாயனார் மகாசபை தலைவர் எஸ்.மாரிச் செல்வம், மதுரை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து தாக்கல் செய்த மனுவில், "நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து, வருகிற 13-ந்தேதி (நாளை மறுநாள்) வெளிவர இருக்கும் திரைப்படம் ‘அனேகன்'.

இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் வண்ணார் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வசனம் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தை தணிக்கை செய்தபோது வண்ணார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் நீக்கப்படாமல் விடப்பட்டுள்ளன. இதனால் ‘அனேகன்' படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரியும், சில காட்சிகளை நீக்கக் கோரியும் தணிக்கை குழு அதிகாரிகளிடம் கடந்த 4ந்தேதி அன்று புகார் மனு கொடுத்தேன்.
அந்த மனு மீது அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வருகிற 13ந்தேதி அன்று திரையிட இருக்கும் அனேகன் படத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்றார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், மனுதாரர் தணிக்கை குழுவை அணுகி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என உத்தர விட்டார்.












Click it and Unblock the Notifications