உசிலம்பட்டியில் 19 வயது பெண் "கெளரவக் கொலை"... சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

இந்தப் பெண் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து மணம் புரிந்தவர் ஆவார். அதன் பின்னர் இப்பெண் மர்மமான முறையில் மரணமடைந்தார்.
உசிலம்பட்டியை அடுத்துள்ள போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (19) என்ற பெண்ணைக் காதலித்தார். இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்தக் காதலுக்கு குடும்பங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து காதலர்கல் இருவரும் கடந்த ஜூலை மாதம் கேரளாவுக்குப் போய் அங்கு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து விமலாவின் தந்தை வீரண்ணன் போலீஸில் புகார் கொடுத்தார். காதலர்கள் கேரளாவில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை அழைத்து வந்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வயதை காரணம் காட்டி இருவரையும் பிரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, விமலா அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் பெற்றோருடன் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விமலாவுக்கும், தேனியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து விமலா, திலீப் குமாருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் சதீஷுடன் துணி எடுக்கப் போவதாக கூறி விட்டு அவரை தேனிக்குக் கூட்டி வந்தார். அங்கு திலீப்குமாரும் வந்தார்.
அங்கு வைத்து திலீப் குமாரை தான் ஏற்கனவே மணந்து விட்ட தகவலை தெரிவித்தார் விமலா. இதனால் சதீஷ் கோபமடைந்தார். அவருக்கும் திலீப் குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த திரும்பிய சதீஷ், விமலாவின் பெற்றோரிடம் நடந்ததைக் கூறினார். இந்தப் பின்னணியில் கடந்த 1ம் தேதி இரவு விமலாவை குடும்பத்தினர்ஷ உறவினர்கள் அடித்துக் கொன்று தீ வைத்து எரித்தும் விட்டனர். வெளியில் தற்கொலை என்று கூறி விட்டனர்.
மனைவி விமலா எரித்துக் கொல்லப்பட்ட தெரிந்து திலீப் குமார் அதிர்ச்சி அடைந்தார். மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரியிடம் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டி.எஸ்.பி குமாரவேலுவுக்கு எஸ்.பி. பிதாரி உத்தரவிட்டார். இதையடுத்து, டி.எஸ்.பி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சாதி மாறி திருமணம் செய்ததால் தனது மனைவி விமலா கொல்லப்பட்டதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் திலீப்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டார். இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் இன்று இந்த வழக்கை சிபிஐயிடம் விசாரிக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திலீப் குமார் சார்பில் வழக்கறிஞர் நிர்மலா ராணி ஆஜரானார்.












Click it and Unblock the Notifications