ஏற்காடு தொகுதியில் இறந்த தி.மு.க. தொண்டரின் உடலை பாதுகாக்க ஹைகோர்ட் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரம் மாவட்டம், முடியனூரைச் சேர்ந்த வி.முருகன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஏற்காடு இடைத்தேர்தலுக்கான பிரசாரம் 2-ந் தேதி மாலையில் முடிவடைந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. தொண்டர் என்ற முறையில் அதன் வேட்பாளர் மாறனுக்காக எனது உறவினர் பா.முருகன் பணியாற்றினார்.
இந்த நிலையில், தி.மு.க. தொண்டர்களின் தேர்தல் பணி சிறப்பாக இருந்ததை பொறுக்க முடியாமல் ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக கூடி, தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பா.முருகன் பலியானார்.
வன்முறை கும்பல் கொடூர ஆயுதங்களோடு தாக்குதல் நடத்தியது குறித்து வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளிலும் அதுபற்றிய செய்திகள் வந்துள்ளன. ஆளும் கட்சியினரின் தாக்குதலால்தான் பா.முருகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் பா.முருகனின் கொலையை, சந்தேகத்துக்கு இடமான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அந்த குற்றத்தை மறைப்பதற்காக பா.முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸ் சூப்பிரண்டு மற்றும் இன்ஸ்பெக்டர் அனுப்பிவிட்டனர். வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு இவர்கள் செயல்படுகின்றனர் என்ற சந்தேகம் உள்ளது.
பா.முருகனின் உடலில் உள்ள காயத்தை பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடக்கூடாது என்ற விதத்தில் அவர்கள் செயல்படுவதாக தெரிகிறது. அவரது உடலில் உள்ள காயங்கள்தான் இந்த வழக்கில் நீதியைப் பெற வழிவகுக்கும்.
எனவே இன்ஸ்பெக்டர் மற்றும் அரசு மருத்துவமனையின் டீன் ஆகியோருக்கு, பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். பிரேத பரிசோதனையை நிபுணத்துவம் பெற்றுள்ள 3 மருத்துவர்கள் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்த கொலை வழக்கை போலீசார் மூடி விடுவார்கள். என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், பா.முருகனின் பிரேத பரிசோதனை காலை 10 முதல் 11 மணி வரைக்கும் நடந்தது என்று குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து அவரது உடலை தற்போதைய நிலையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இம் மனு மீதான விசாரணையை 5-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications