மதன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை: காணாமல் போன திரைப்படத் தயாரிப்பாளர் மதன் குறித்து பெற்றோர், மாணவர்கள் அளித்த புகார்கள் அடிப்படையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா.. அதுகுறித்து விரிவான பதில் தர வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வடபழனியைச் சேர்ந்த மதனின் தாயார் ஆர்.எஸ்.தங்கம் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், "எனது மகன் பெயர் மதன் (44) பணி நிமித்தமாக கடந்த மே 27-ஆம் தேதி டெல்லி சென்றார்.
மறுநாள் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, மே 29-ஆம் தேதி சென்னை வருவதாக கூறினார். ஆனால், 29-ஆம் தேதி சென்னை வரவில்லை. அதற்கு பதில் வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், 'எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தருடன் பணம் தொடர்பான பிரச்னையில் மன வேதனை அடைந்துள்ளதாகவும், காசிக்குச் சென்று தனது வாழ்வை முடித்துக் கொள்வதாகவும்' கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எனது மகன் மதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்,' என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், மதன் காணாமல் போனது குறித்து, அவரது தாயார் கொடுத்த புகார் மீது கடந்த 1-ஆம் தேதி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடங்களுக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, பெரும் தொகையை மதன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பல மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அந்தப் புகார்கள் எல்லாம் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். அதே நேரம், மதன் மீது அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், வழக்குகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்ற விவரம் அரசு வக்கீலுக்குத் தெரியவில்லை.
எனவே, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை புதன் கிழமைக்கு (ஜூன் 8) தள்ளி வைக்கிறோம். அன்றைய தினம் மதன் மீது, ஏதாவது வழக்குப் பதிவு செயப்பட்டுள்ளதா போன்ற விவரங்களைக் கேட்டு அரசு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அதுவரை, காணாமல் போன மதனை தேடும் பணியை காவல் துறை தொடரலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.