சென்னைக் கட்டிட விபத்து... பெண் ஆர்க்கிடெக்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சென்னைப் போரூரில் 61 பேரை பலிவாங்கிய கட்டிட விபத்து வழக்கில் பெண் ஆர்க்கிடெக்டின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 28ம் தேதி சென்னையில் இடியுடன் பெய்த மழையில், போரூர் மவுலிவாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 11மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கட்டிட விபத்தான இதில் 61 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை உண்டாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் ஆர்க்கிடெக்ட்...
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய கட்டிடத்திற்கான வரைபடத் தயாரிப்புப் பணியில் உதவியதாகக் கூறப்படும் சுகன்யா (27) என்ற பெண் ஆர்க்கிடெக்ட் முன்ஜாமீன் மனு அளித்திருந்தார். அதில், அவர் ‘தான் இந்தத் திட்டத்தின் வரைபடத் தயாரிப்புப் பணியில் மட்டுமே இணைந்து பணியாற்றியதாகவும் கட்டிட நிர்மாணப் பணிகளில் தனக்கு பங்கு எதுவும் இல்லையென்றும்' அவர் தெரிவித்திருந்தார்.
முன் ஜாமீன் மனு...
மேலும், ஒரு ஆர்க்கிடெக்டாக கட்டிடத்தின் உயரம், வடிவம், அறைகளின் உயரம், ஜன்னல்களின் அளவு, குடியிருப்பின் உள்ளே அறைகள் அமையும் இடம் போன்றவற்றை மட்டுமே தாங்கள் தீர்மானிக்க முடியும் என்று சுகன்யா தெரிவித்திருந்தார். இதுதவிர கட்டிடத்தின் அடித்தள ஆழம், ஸ்திரத்தன்மைக்கான மண் பரிசோதனை, தூண்களின் தடிமன், கான்கிரீட் கலவை, இரும்புக் கம்பிகளின் வலிமை, அடர்த்தி போன்றவற்றை சிவில் மற்றும் கட்டுமானப் பொறியாளர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் சுகன்யா கூறியிருந்தார்.
எதிர் மனு...
இதற்கு எதிராக அரசு வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், ‘சுகன்யாவிற்கு முன்ஜாமீன் வழங்கினால், அது ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும்' என அவர் தெரிவித்திருந்தார்.
தள்ளுபடி...
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அதில், வழக்கு குறித்த விசாரணை இன்னும் ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்று தெரிவித்த நீதிபதி பி.தேவதாஸ், சுகன்யாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
தீர்ப்பு...
மேலும், கட்டிட வரைபடத் தயாரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி இந்த சமயத்தில் அவருக்கு முன்ஜாமீன் அளிப்பது பொருத்தமானதாக இருக்காது என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.