பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடம் இயல்பாக பேசுவதுபோல் பேசி, பாலியல் சீண்டல்களில் ஒருசில ஆசிரியர்கள் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பங்களை ஊடகத்துறை தொடர்ந்து வெளிச்சம்போட்டு காட்டினாலும், அறுவறுக்கத்தக்க இதுபோன்ற நிகழ்வுகளும் இன்னும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது. அதுபோன்ற சம்பவம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாச்சம்படு பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், அந்தப் பள்ளியில் பயின்று வரும் 5-ம் வகுப்பு மாணவிடடம் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, தனது தந்தையிடம் கூறியதால் அதிர்ச்சியடைந்த அவர், பள்ளி தலைமை ஆசிரியர் பால்வண்ணன், தனது மகளிடம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உமரபாத் காவல் துறையினர், பள்ளி தலைமை ஆசியரிடம் விசாரணை நடத்தினர். அவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், இதேபோன்று ஏற்கெனவே பேர்ணாம்பட்டு அருகே பணிபுரிந்தபோது, பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் பால்வண்ணனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
பள்ளி மாணவிக்கு ஆசானாக இருந்து, பல்வேறு நல்ல தகவல்களை எடுத்துக்கூற வேண்டிய தலைமை ஆசிரியரே, இதுபோன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியடைய செய்துள்ளது. வேலியே பயிரை மேய்வது போன்று நடைபெறும் இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள், மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications