சென்னையில் பலத்த மழை: பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்
சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்திலும் நேற்று மாலை முதல் மழை பரவலாகப் பெய்து வருகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும், இதனால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
வானிலை மையம் குறிப்பிட்டதைப் போலவே, நேற்று இரவு முதல் கன்னியாகுமரி, நெல்லை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மாலை சென்னையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால், அலுவலகங்கள் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், இரவு முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. அடையாறு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், மீனம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகளில் இப்போது வரை கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக எட்டு தென்மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், நான்கு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.