உருவானது புயல்: கடலூர், விழுப்புரத்தில் கனமழை; கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
கடலூர்: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. மீனவர்களை எச்சரிக்கும் விதமாக கடலூர்,புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
அந்தமான்- நிக்கோபர் தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருக்கிறது. இது புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செஞ்சி, திருநாவலூர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மயிலம், தியாகதுருகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பம் பகுதிகளில் இரவு 8 முதல் நள்ளிரவு 12 மணி வரை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பெருகியது. எனவே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூரில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டன. கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
பண்ருட்டியில் இரவு 9 முதல் 11 மணி வரை இடி-மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கி சுமார் 20 வீடுகளில் மின்விசிறி, மின்விளக்குகள் நாசமாகின. தரைவழி தொலைபேசிகள் செயலிழந்தன. விருத்தாசலம், நெய்வேலி உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்தது.
புதுச்சேரியிலும் கனமழை
புதுவையில் இரவு விட்டு விட்டு நள்ளிரவு வரை மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் குளிர்ச்சியான நிலை நிலவியது. இன்று காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. கடலில் அலைகள் சீற்றத்துடன் எழுந்தன. புதுவை துறைமுகத்திலும் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications