கொட்டித் தீர்த்த மழையால் விழுப்புரத்தில் தண்டவாளம் விரிசல் - அனைத்து ரயில்களும் தாமதம்!
சென்னை: விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு தென் மாவட்டத்தில் இருந்து வந்த அனைத்து ரயில்களும் இன்று தாமதமாக வந்து சேர்ந்தன.
விழுப்புரம் பகுதியில் அதிகாலையில் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் விழுப்புரம், முண்டியம்பாக்கம் இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சியில் இருந்து எழும்பூர் நோக்கி வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பின்னால் வந்த பாண்டியன், நெல்லை, மன்னார் குடி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அதிகாலை நேரம் என்பதால் ஊழியர்கள் வந்து தண்டவாளத்தை சரி செய்ய சிறிது நேரம் நீடித்தது. பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அந்த பாதையில் போக்குவரத்து சீரானது.
இதனால் எழும்பூர் வரவேண்டிய அனைத்து ரயில்களும் கிட்டத்தட்ட 1 மணி நேரம் தாமதமாக வந்தன. காலை 5.15 மணிக்கு வர வேண்டிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் 6.30 மணிக்கு வந்து சேர்ந்தது. பாண்டியன் எக்ஸ்பிரஸ் 6.45 மணிக்கும் அதனைத் தொடர்ந்து வந்த நெல்லை உள்ளிட்ட எல்லா ரெயில்களும் தாமதத்துடன் வந்தன.
இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளை அழைக்க வந்த உறவினர்கள் நீண்ட நேரம் காத்து இருந்தனர்.
ரயில்கள் தாமதமாக வந்ததால் எழும்பூர் ரயில் நிலையம் முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆட்டோக்கள், கார்கள் சாலையோரம் நின்றதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோடுகளில் வாகனங்கள், ஆக்கிரமிப்பு கடைகள் புதிதாக உருவாகி இருப்பதே இந்த நெரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்யப்படுகிறது.