வலுக்கிறது காற்றழுத்தம்.. புயலாக மாறலாம்.. சென்னையில் இரவில் கன மழை பெய்யுமாம்!
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுவடைந்து வருவதாகவும், இது புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இரவில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னையிலும் கடலோர தமிழகத்திலும் நேற்று முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்களிலும் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் லேட்டஸ்ட் மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. அப்படி அது புயலாக மாறும்பட்சத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு எந்த திசை நோக்கி செல்லும் என அறிவிக்கப்படும்.
அடுத்த 24 மணி நேரத்தில்
அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கன மழையும் உள் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் லேசான மழையும் எதிர்பார்க்கலாம்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு.
எண்ணூரில் அதிகபட்ச மழை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் 10 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்றார் ரமணன்.












Click it and Unblock the Notifications