காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை... வெள்ளத்தில் சிக்கிய 170 பேர் மீட்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக இல்லாத அளவிற்கு இந்தாண்டு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக 8 ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டது.
வெள்ளநீரால் கரையோர பகுதிகல் பாதிக்கப்பட்டன. விரைந்து செயல்பட்ட மாவட்ட நிர்வாகத்தினரால், வெள்ளத்தில் சிக்கிய 170 பேர் மீட்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை அம்மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி நேரடி ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. நகரத்தை சுற்றியுள்ள நத்தப்பேட்டை, புத்தேரி, நெட்டேரி, செவிலி மேடு, ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பினில் ஆயிரம் பேரும் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணிதுறை சார்பினில் 275 பேரும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு பணியில் ஈடுபட்டு பிள்ளையார்பாளையம், மடம்தெரு, பள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 7294 நபர்கள் 26 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை பாதிப்பு குறித்து பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 044-27237107, 044-27237207 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.












Click it and Unblock the Notifications