கொளுத்திய கோடைக்கு இதமாக கோவை, தேனியில் கொட்டிய மழை !
கோவை: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் கோவை, தேனி மாவட்டங்களில் நேற்று மாலையில் பெய்த மழை, அனலில் தவித்த மக்களை குளிர்வித்துள்ளது. விவசாயிகளும் மகிழச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகி வருகிறது.
அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பகல் வேளைகளில் பொதுமக்கள் வெளியே வரவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக அனலாக உள்ளதால் வீட்டில் இருப்பவர்கள் கூட புழுக்கத்தில் தவிக்கும் நிலை காணப்படுகிறது.
கோவையில் கடந்த சில வாரங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கோவை, பொள்ளாட்சி, மேட்டுப்பாளையம் ஆனைமலை, ஆழியாறு உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலத்த காற்றுடன், இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
கோவை டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். வாகன ஓட்டுனர்களும் மிகவும் சிரமப்பட்டனர்.
அதேபோல் தேனியில் அல்லிநகரம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலையில் கனமழை கொட்டியது. இதனால் வெயிலில் தவித்து வந்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.