தென் மாவட்டங்களில் வெளுத்தெடுக்கும் கன மழை.. 3 மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை
மதுரை: தமிழகத்தின் தென் பகுதிகளான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இன்று மாலை வரை விடாமல் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகவில்லை.
தூத்துக்குடியில் நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிகப் பெரிய வெள்ளம் வந்து பல குடியிருப்புகளை மூழ்கடித்தது. அதேபோல டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் மீண்டும் கன மழை பெய்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3.5 செமீ மழை பெய்துள்ளது.
ராமேஸ்வரத்தில் 67.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் முறையே 51, 38 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அங்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையும் அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல், நெல்லை மாவட்டத்தில் பாபநாசத்தில் 23 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.