பலத்த மழை: 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை: வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுவையில் காரைக்கால் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வட மேற்கு திசையில் நகர்வதால் தமிழக கடலோரப் பகுதியில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தென் கிழக்கு திசையில் இலங்கை-அந்தமான் இடையே காற்றழுத்தம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக உருவானது. அதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல மழை தொடர்கிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் தென் மேற்கு திசையில் நகர்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். இதையடுத்து அந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று மேற்கு திசையில் நகரும். அப்படி நகரும் போது கடலோரப் பகுதியைப் போல உள் தமிழகத்திலும் கனமழை பெய்யும். இது இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications