சென்னையில் பருவமழை தீவிரம்: இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை
சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் புதன்கிழமையன்று நல்ல மழை பெய்தது. இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது.

சூறைக்காற்றுடன் கனமழை
இதனிடையே இன்று பிற்பகலில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இடியுடன் மழைக்கு வாய்ப்பு
அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று வடமேற்கு திசையிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் நகர்ந்து வருகிறது. இதனால் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளனார்.

வெள்ள பாதிப்பு
தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வெள்ளப் பாதிப்பு ஏற்படலாம் என கருதப்படும் பகுதிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்படலாம் என்று உஷார்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை தயார் நிலையில் நிறுத்த முடிவு செய்துள்ளனர்.

பேரிடர் மீட்புக்குழு தயார்
முதல் கட்டமாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் 5 படைப்பிரிவுகளை அழைக்க உள்ளனர். அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழு முகாமில் இருந்து அவர்கள் வரவழைக்கப்படுவார்கள். ஒவ்வொரு படையிலும் 45 பேர் இருப்பார்கள். அந்த வகையில் முதலில் 225 பேர் வர உள்ளனர். நாளை முதல் இவர்கள் சென்னை, கடலூர், தூத்துக்குடி நகரங்களில் தயார் நிலையில் நிறுத்தப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications