அரியலூர்: கொட்டும் மழையில் வந்து ஓட்டு போட்ட பெண் மின்னல் தாக்கி பலி
நெல்லை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
அரியலூரில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்களித்து விட்டு வந்த பெண், மின்னல் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் சனிக்கிழமையன்று உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. வாக்குப்பதிவு நாளான இன்று மழை பெய்வதால் பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு மந்தமாகவே உள்ளது.
திருவாரூரில், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் கன மழை வாக்காளர்கள் வாக்களிப்பதில் சிரமம் நிலவி வருகிறது. இதேபோன்று திண்டுக்கல், மதுரை, மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதனால் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெறுகிறது.
வாக்குபதிவுக்காக நெல்லை மாவட்டத்திலுள்ள 10 சட்டசபை தொகுதிகளில் 1368 வாக்குசாவடி மையங்களில், 2931 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கடையநல்லூர் தொகுதியில் அதிகபட்சமாக 321 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக பாளை தொகுதியில் 268 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு நிரந்தர காவலர், ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கைகேற்ப ஓய்வு பெற்ற போலீஸ் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 288 மையங்கள் பதட்டமானவை எனவும், 266 மிக பதட்டமானவை என அடையாளம் காணப்பட்டு, அந்த சாவடிகளில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு, நுண்பார்வையாளர் பணியில் இருந்தனர். மேலும் இந்த பகுதிகளில் வாக்குபதிவு வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் இரண்டு கம்பெனி (160 படைவீரர்கள்) துணை ராணுவ படையினரும், மாவட்ட எஸ்.பி கட்டுப்பாட்டில் 13 கம்பெனி (1060 படைவீரர்கள்) துணை ராணுவ படையினர் என மொத்தம் 1220 படைவீரர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டி வருகிறது என்றாலும் குடையுடன் வந்து வாக்காளர்கள் ஜனநாயகக் கடமை ஆற்றி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் வந்து ஒரு பெண்மணி வாக்களித்தார். அவர் வாக்களித்து விட்டு வெளியே வரும் போது திடீரென மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல்கருகி அவர் உயிரிழந்தார். இதைப் பார்த்த வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications