சென்னையை மிரட்டிய இடி மழை... மின்சாரம் துண்டிப்பு
சென்னை: சென்னையில் இடி, மின்னலுடன் பெய்த திடீர் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர், ஆனாலும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த மழை அவசியம் என்று சென்னைவாசிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பச்சலனம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சொன்னது போலவே மாலை 5 மணிவரை வெயில் சுள்ளென அடித்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை கொட்டித்தீர்த்தது.
மயிலாப்பூர், மந்தைவெளி பெய்த கனமழை மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியவர்கள் ஆங்காங்கே பாதுகாப்பான இடங்களை தேடி அலைந்தனர். பேருந்து நிறுத்தங்களில் நின்று கொண்டு மழையை ரசித்தனர். சென்னையில் கடந்த ஆண்டு மழை குறைவாக பெய்த காரணத்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதேபோல தொடர்ந்து மழை பெய்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நள்ளிரவில் மழை
இதனிடையே நேற்றிரவு ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழையால் பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலைகளில் தண்ணீர் ஓடியது. சூறாவளி மழையில் மரங்களும் பல இடங்களில் சரிந்து விழுந்தன. கொளத்தூர் சாந்தி தெரு, ராயபுரம் பி.வி.கோவில் உள்ளிட்ட பல இடங்களில் 25க்கும் மேலான மரங்கள், கிளைகள் முறிந்து விழுந்தன.
மின் விநியோகம் துண்டிப்பு
இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. காற்று பலமாக வீசியதால் மின்கம்பிகளும் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதனால் ஒருசில இடங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. முகப்பேர் மேற்கு, ஏரித்திட்டம், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் இரவு 11 மணிக்கு மின்சாரம் தடைபட்டது. அதிகாலை 5 மணிக்குதான் மின் சப்ளை செய்யப்பட்டது. இதேபோல கொளத்தூர், கொடுங்கையூர், மூலக்கடை, பெரம்பூர், எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
மாநகராட்சி பணியாளர்கள்
இதுபற்றி மாநகராட்சிக்கு 50க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இன்று காலையில் இருந்து 1913 தகவல் மையத்திற்கு ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகாரின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளுக்கு சென்று வெளியேற்றினர். முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியும் தீவிரமாக நடந்தது.
எரிந்து போன டிரான்பார்மர்கள்
மின்சார வயர்கள் அறுந்து சப்ளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்று காலையில் இருந்து அதனை சீர்செய்யும் பணி நடந்தது. சில டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு இன்றி வெடித்தது. அவற்றையும் சரி செய்தனர்.
தொடரும் மழை
இந்த நிலையில் இன்று மாலையில் இருந்து கனமழை பெய்து வருவதால் மாநகராட்சி பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். சாலைகளில் தண்ணீரை உடனுக்குடன் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் காற்றழத்த தாழ்வு
இந்த நிலையில் வங்கக்கடலின் கிழக்கு திசையில், காற்றழுத் தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது ஆந்திரா, ஒடிசா, மற்றும் வட தமிழக கடலோரப்பகுதி வரை பரவி உள்ளது. இதன் காரணமாக வடதமிழகத்தில் கூடுதல் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஒடிசா கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பாம்பன் மற்றும் நாகையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லும்படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
படங்கள்: பிரபு