கனமழை: வைகையில் வந்த வெள்ளம்.... விவசாயிகள்... மக்கள் மகிழ்ச்சி
மதுரை: மதுரையில் நேற்றிரவு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. வைகையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ஆற்றின் குறுக்கே தரைப்பாலங்களில் போலீசார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
கனமழை காரணமாக மதுரையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கோரிப்பாளையம், சிம்மக்கல், கீழவாசல், பெரியார், ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி பஸ்நிலையங்க ளிலும் தண்ணீர் தேங்கியது.

திருப்புவனம் வைகையாற்றில் மழை தண்ணீர் பரவலாக செல்வதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்புவனம் வைகையாற்றில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. மழை இல்லாததால் வைகையாற்றில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.
மதுரையில் வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் சாக்கடை நீர் கலந்து வந்ததால் தண்ணீரின் நிறம் கருப்பாக துர்நாற்றத்துடன் வந்தது.
மதுரை கிழக்கு, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் தாகத்தை தீர்ப்பது வைகையாறுதான் வறட்சி காரணமாக குடிநீர் திட்ட கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து கிட்டது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறைந்து விட்டது.
தற்போது பெரியார் அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை, வைகை அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரும் கடந்த வாரம் நிறுத்தப்பட்டது. இந்த நிலை கனமழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்புள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது தற்போது வைகையில் வரும் மழைத்தண்ணீரை ஆற்றிலேயே ராமநாதபுரம் வரை கொண்டு செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மதுரை விரகனூர் மதகு அணையில் இருந்து பார்த்திபனூர் மதகு அணை வரை 72 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காக தண்ணீர் கொண்டு செல்ல அரசு உத்தரவிட்டுள்ளது என்றார். ஆனால் திருப்புவனம் வட்டாரத்தில் மழையை நம்பி ஏராளமானோர் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வைகையில் வருவது மழை தண்ணீர்தான் இதனை கால்வாய்களில் கொண்டு சென்று கண்மாய்களில் தேக்கினால் ஓரளவிற்கு விவசாயம் செழிக்கும். ஆனால் பொதுப்பணித்துறையினர் தமிழக அரசின் உத்தரவு என்று ஷட்டர்களை அடைத்து கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். வறட்சி காரணமாக தண்ணீர் நேற்றுதான் திருப்புவனத்தை தாண்டியுள்ளது. ராமநாதபுரத்திற்கு இந்த தண்ணீர் செல்வது சந்தேகம் என்கின்றனர் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications