சென்னையில் மீண்டும் கொட்டும் கனமழை... வடியாத வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்
சென்னை: கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டிவருவதால் சென்னையில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் குளம்போல வெள்ளநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் வடியாமல் உள்ள நிலையில் விடாமல் கொட்டி வரும் கனமழையால் மக்களின் அச்சம் அதிகரித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதல் மீண்டும் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலையில் கடும் வெயில் வாட்டியது. பிற்பகலில் சென்னையில் வானிலையானது பரவலாக மாறியது. கருமேகங்கள் சூழ்ந்து மழைக் கொட்டத் தொடங்கியது.
சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், சென்ட்ரல், கிண்டி, அண்ணாசாலை என பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தி.நகர், பாண்டிபஜார் பகுதிகளில் சாலைகளில் வெள்ளநீர் குளம்போல தேங்கியுள்ளது. கனமழை காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இடியோடு, காற்றும் பலமாக வீசுகிறது.

சாலைகளில் வெள்ளம்
கனமழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒருசில பகுதிகளில் சாலைகள் தெரியாத வண்ணம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்களை நிறுத்திவிட்டு பேருந்து நிழற்குடைகளில் தங்கினர். நேரம் செல்லச் செல்ல மழை தீவிரமடைந்து வருவதால் சென்னைவாசிகளிடையே ஒருவித அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

குடியிருப்புகளில் வெள்ளநீர்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஏற்கனவே பெய்துள்ள கனமழையால் ஏரி. குளங்கள் நிரம்பி வழிகின்றன. வெள்ளநீர் காரணமாக குடியிருப்பு பகுதிகள் மிதந்து வருகின்றன. ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

படகுப் போக்குவரத்து
புறநகர் பகுதிகளில் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் படகுப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை மீண்டும் முடங்கியுள்ளது. மழை எப்போது நிற்கும், மீண்டும் எப்போது வீடு திரும்புவோம் என்று எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர் புறநகர்வாசிகள்.

விழுப்புரத்தில் வெள்ளம்
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக வீடுர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 5500 கனஅடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரமுள்ள சிறுவை, கொம்பூர், ரெட்டிக்குப்பம், கணபதிபட்டு உள்ளிட்ட 15 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை எச்சரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோர முள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுவையில் கனமழை
புதுவையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications