காற்றழுத்த தாழ்வு நிலை- தென் கடலோர மாவட்டங்களில் 6 நாட்களுக்கு தொடர் மழை பெய்யும்!
சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அது அதே இடத்தில் நீடிப்பதால், தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இன்றுமுதல் (வெள்ளிக்கிழமை) முதல் தென்கடலோர மாவட்டங்களில் 6 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 18ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக மழை இல்லாமல் இருந்தது.

நேற்று முதல் சில இடங்களில் மழை மீண்டும் பெய்யத்தொடங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் நேற்று காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 8 மணியளவில் மழை பெய்தது.
மீனவர்கள் மாயம்
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 3 பேர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 26 ஆம் தேதி கடலுக்கு சென்ற 3 பேரும் இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ரயில் நிறுத்தம்
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய ஊர்களிலும் கடல் சீற்றத்துடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை-ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பலத்த சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தவிப்பு
காலை 5.45 மணிக்கு ராமேஸ்வரம்-மதுரை செல்லும் பயணிகள் ரயிலும் பாம்பன் அருகே அக்காள்மடம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் தாமதமாக செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு
ராமேஸ்வரம் பகுதியில் நேற்று இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் காற்றின் வேகத்தால் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் மூழ்கியும், சேதமடைந்து உள்ளன.
மேலடுக்கு சுழற்றி
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை சென்னை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன், தென் மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிக்கிறது. மேலும் இலங்கை அருகே மேலடுக்கில் சுழற்சி உள்ளது.
6 நாட்களுக்கு தொடர்மழை
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தென் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அநேக இடங்களில் தொடர்ந்து மழை பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யும் மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும்.
டிசம்பர் 3 வரை நீடிப்பு
தென் மாவட்டங்களை பொருத்தவரை மழையின் தன்மை அதிகரித்து டிசம்பர் 3-ஆம்தேதி வரை மழை பெய்யும். சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நாளை முதல் மழை பெய்யத்தொடங்கும். அதன் பின்னர் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications