சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு வரை கடும் போக்குவரத்து நெரிசல் !
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிக பேருந்துகள் இயக்கப்படுவதால் சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு சொந்த ஊர் செல்ல, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி 9 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் நிலை உருவாகி உள்ளது. அதேபோல் ஆம்னி பேருந்துகளும் அதிக அளவில் இயக்கப்படுவதால் மதுரவாயலில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றனர்.
ஒரே நேரத்தில் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் வந்து குவிந்துள்ளதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் பேருந்துகளும் நெரிசலில் சிக்கியுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.