கனமழை எதிரொலி: ஸ்தம்பித்தது சென்னை மாநகரம்... பொதுமக்கள் பெரும் அவதி!
சென்னை: கனமழையால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, சென்னை நகரமே ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் நேற்று மாலை சுமார் 3 மணிநேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் முக்கிய சாலைகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு புரசைவாக்கம், ராதாகிருஷ்ணன் சாலை, தி.நகர், வடபழனி, அண்ணசாலை, எழும்பூர், கிண்டி, ராயப்பேட்டை, டிடிகே சாலை, சென்ட்ரல், கோடம்பாக்கம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஓஎம்ஆர் சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வடபழனியில் இருந்து போரூர் செல்லும் ஆற்காடு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. இதனிடையே தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் இரண்டு அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அண்ணா சாலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் தேங்கி நின்றதால் நாலாபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. அலுவலகம் சென்றவர்கள் வீடு திரும்பமுடியாமல் பெரும் தவித்தனர். இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். பின்னர் இரவு 12 மணிக்கு மேல் போக்குவரத்து சரிசெய்யப்பட்டு வாகனங்கள் சிரமம் இன்றி இயக்கப்பட்டன.
இந்நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்தது. கோயம்பேடு-தாம்பரம், திருவான்மியூர்-கோயம்பேடு, அம்பத்தூர்- கோயம்பேடு உள்ளிட்ட தடங்களில் கூடுதல் பேருந்துகளை இரவு நேரங்களில் இயக்க முடிவு செய்துள்ளதாக மாநக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.