தமிழக எல்லையில் கொட்டித் தீர்க்கும் மழை... வெள்ளம் கரைபுரண்டோடும் பாலாறு
தமிழக எல்லையில் கொட்டித் தீர்க்கும் மழையால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
வேலூர்: தமிழக-ஆந்திர எல்லையில் கொட்டித் தீர்த்து வரும் மழையால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வறட்சியான மாவட்டங்களில் ஒன்று வேலூர் மாவட்டம். இங்கு கடந்த 2005 மற்றும் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழை காரணமாக, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்ததுடன், நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

இதனால் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாவிட்டாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. தற்போது இரு வாரங்களாக நல்ல மழை பெய்ததால் வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வேலூர் அருகே கொணவட்டம் வரையில் பாலாற்றில் சனிக்கிழமை பிற்பகலில் நீர் வந்தது. இதனால் மனம் மகிழ்ந்த அப்பகுதி மக்கள் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இந்த நீர் சனிக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலாற்றுப் பகுதிக்கும் வந்தது. இத்தனை வெள்ளப்பெருக்குக்கு பிறகும், வேலூரின் முக்கிய நீராதாரமான சதுப்பேரியில் தூர்வாரப்படாததால் நீர் செல்ல முடியவில்லை. இதனால் வடகிழக்கு பருவமழைக்குள் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் அப்பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அண்டைய மாநிலங்களில் கனமழையால் வேலூர் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
எனவே பொதுமக்கள் அவற்றில் குளிப்பது , செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உயிரிழப்பு நேரும் அபாயம் உள்ளதால் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications