அடடா.. ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதாக பொன். ராதாகிருஷ்ணன் மீது புகார்!
கோவை: கோவையில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையில் உள்ள சமூக நீதி கட்சியின் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தனர்.

அந்த மனுவில், "தமிழகத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்ற சட்டத்தை தமிழக அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
நேற்று கோவையில் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் இருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் இருசக்கர வாகன பிரசாரத்தை நடத்தியுள்ளனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியுள்ளனர். இது மோட்டார் வாகன சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக மனு கொடுக்க வந்த நிர்வாகிகள் ஹெல்மெட் அணிந்து வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications