அதிரடி அரசியல் அறிவிப்பு... சொல்லியடித்த ரஜினியின் முழு பேச்சு இதோ #Rajinikanthpoliticalentry
வரும் சட்டசபை தேர்தலில் அதிரடி அரசியலில் இறங்குவது குறித்து ரசிகர்களிடையே ரஜினி பேசிய பேச்சுகள் என்ன என்பதன் ஒரு தொகுப்பு.
Recommended Video
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிரடியாக அரசியலில் இறங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்க போவதாக கடந்த 26-ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் இன்று அவரது பேச்சை கேட்க ரசிகர்கள், தமிழகமே ஆவலாக இருந்தது.
ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், நான் பில்ட்அப் கொடுக்கவில்லை, தானாக ஆகிவிட்டது. எனக்கு அரசியல் கூட பயமில்லை. மீடியாவை பார்த்தால்தான் பயம்.
பெரிய ஜாம்பவான்களே மீடியாவை பார்த்து பயப்படுகிறார்கள், நான் குழந்தை. சோ சார் எனக்கு மீடியாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என பயம்காட்டி வைத்திருந்தார். இப்போது சோ இருந்திருந்தால் எனக்கு 10 யானை பலமாக இருந்திருக்கும். சோ ஆத்மா எனக்கு பலமாக இருக்கும்.
மாற்றத்தை நான் பார்க்கிறேன்
கடமையை செய், மற்றதை நான் பார்க்கிறேன் என்றார் கண்ணன். யுத்தம் செய், வெற்றி பெற்றால் நாடாள்வாய். யுத்தத்தில் தோற்றால் இறப்பாய். யுத்தம் செய்யாவிட்டால் கோழை என்பார்கள். நான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன். இன்னும் அம்பு விடுவதுதான் பாக்கி. நான் அரசியலுக்கு வருவது உறுதி.. இது காலத்தின் கட்டாயம். வரப் போகும் சட்டமன்றத் தேர்தலில் நான் தனிக் கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நான் நிற்பேன். அதுக்கு முன்னாடி உள்ளாட்சித் தேர்தல் வருது. அதுக்கு நேரம் இல்லாததால போட்டியிடவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவெடுப்பேன்.
அரசியலில் வந்திருப்பேன்
நான் அரசியல்ல வருவது பேருக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் இல்லை. அதை நீங்க ஆயிரம் மடங்கு கொடுத்துட்டீங்க. பதவி மேல எனக்கு ஆசை இருந்தால் 1996லயே நான் அரசியல்ல வந்திருப்பேன். அது வேண்டாம்னு தள்ளி வைச்சேன். 48 வயசுலயே அதை தள்ளி வச்சேன், 68 வயசுல அந்த ஆசை வருமா. அரசியல் ரொம்ப கேட்டுப் போச்சி. நாட்டு அரசியல் ரொம்ப கெட்டுப் போச்சி.
தலைகுனிய வச்சிடுச்சி
ஜனநாயகம் சீர்கெட்டுப் போச்சி. கடந்த ஒரு ஆண்டா, தமிழ்நாட்டில் நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், ஒவ்வொரு தமிழக மக்களையும் தலைகுனிய வச்சிடுச்சி. எல்லா மாநில மக்களும் நம்மளப் பார்த்து சிரிக்க வச்சிட்டிருக்காங்க. பழைய காலத்தில் அடுத்த நாட்டு கஜானாவை கொள்ளையடிப்பார்கள். இப்போ சொந்த நாட்டிலேயே, சொந்த பூமிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த முடிவை நான் எடுக்கலைன்னு சொன்னால், என்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்ற அந்த குற்ற உணர்வு என்னை பாதிக்கும்.
உண்மையான நேர்மையான நாணயமான வெளிப்படையான சாதி மத சார்பற்ற ஒரு ஆன்மீக அரசியல் கொண்டு வரணும். அதுதான் என்னுடைய நோக்கம், விருப்பம், குறி. அது ஒரு தனி மனுஷனால முடியாது. அரசியல் மாற்றம், அதுக்கு நேரம் வந்தாச்சி, சிஸ்டமே மாத்தணும். வேர், கிளை போன்ற அனைத்துமே தொண்டர்கள்தான்.
கண்காணிப்பதே எனது வேலை
எனக்கு தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்கள் உதவியோடு ஆட்சியமைத்தால், அரசிடமிருந்து உதவிகள் மக்களை சென்றடையும். யார் தப்பு செய்தாலும் தட்டி கேட்கும் காவலர்கள் வேண்டும். தகுந்த பதவிக்கு தகுந்த ஆளை நியமித்து வேலை பார்க்கிறார்களா என்பதை கண்காணிப்பதே எனது வேலை. பதிவு செய்யாத மன்றங்களையும் பதிவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும். இது சினிமா இல்லை, நாம் காவலர்களாய் மாறப்போகிறோம், நாம் மட்டும் போதாதது. பெண்கள், இளைஞர்கள் அனைவரையும் நமது மன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்.
சட்டசபை தேர்தல்
இப்போதைக்கு விமர்சனங்கள் செய்யப்போவதில்லை. சட்டசபை எப்போது வருகிறதோ அதற்கு முன்பு உரிய நேரத்தில் கட்சி ஆரம்பிப்போம். நாங்கள் எதை எதை செய்யப்போகிறோம் என்பதை முதலிலேயே அறிவிப்போம். செய்ய முடியாவிட்டால் 3 வருடங்களில் ராஜினாமா செய்வோம் என வாக்குறுதி அளிப்போம். நமது தாரக மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு. ஒவ்வொரு கிராமங்களிலும், தெருக்களிலும் மன்றங்களை வலுப்படுத்த வேண்டும்.
சாதாரண விஷயம் இல்லை
தமிழக மக்கள் எல்லாரும் என் கூட இருக்கணும். இது சாதாரண விஷயமில்லை, இது எனக்குத் தெரியும். கட்சி ஆரம்பிச்சி, தேர்தல்ல போட்டியிடறது சாதாரண விஷயமில்ல. நடுக்கடல்ல முத்து எடுக்கிற மாதிரி. மக்களுடைய அன்பு, அபிமானம், ஆதரவு இருந்தால்தான் இதை சாதிக்க முடியும். ஆண்டவனுடைய அருள், மக்களுடைய அன்பு இரண்டும் எனக்குக் கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு என ரசிகர்களின் ஆரவாரத்துடன் ரஜினி அறிவித்தார்.