108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்
போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று நடத்த இருந்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தீபாவளியன்று நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
25 சதவீதம் போனஸ் என்பன உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.வி.கே - ஈ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தை அடுத்து, தீபாவளி தினத்தன்று அக்டோபர் 28-ஆம் தேதி இரவு 8 முதல் 29-ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்களின் அறிவிப்புக்கு எதிராக தடை விதிக்கக்கோரி பேட்ரீக் என்ற வழக்கறிஞர், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுலிடம் முறையிட்டார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பேட்ரிக் ஆஜராகி தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படும். அப்போது அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானது.
இந்தநிலையில் அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்பலி ஏற்படும். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வாதிட்டார். அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஆம்புலன்ஸ் நிறுவனத்துடனும், ஊழியர்கள் சங்கத்துடனும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், கடந்த ஆண்டு உத்தரவுப்படி சேவை நிறுவனமான ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே உத்தரவும் தற்போது தற்போது பிறப்பிக்கபடுகிறது. எனவே இந்த ஆண்டும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என உத்தரவிட்டனர்.
கடந்த ஆண்டு தீபாவளியன்று வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பின்னர் நடந்த பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்பு தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications