“தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மட்டும் மாற்றம் கொண்டுவர முடியாது”- ஐகோர்ட் கிளை கருத்து
மதுரை: மக்கள் மனதில் பாகுபாடு மறையாமல், தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், சாதி பெயர்கள் நீக்கம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப் பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19-க்குள் முடிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளன. எனவே அரசாணையை செயல்படுத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் தெரிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த மனு புதன்கிழமை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 'மக்களின் மனதில்தான் பாகுபாடு இருக்கிறது. அதையே மாற்ற முயல வேண்டும். அதை விடுத்து தெருப் பெயர்களை மாற்றுவதால் மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர இயலாது' என்றனர்.
அதற்கு அரசு தரப்பில், 'மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் மனத்திலும் மாற்றம் வரும்' எனத் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications