பிரிட்ஜோ சுட்டுக் கொலை.. உயர் அதிகாரி விசாரிக்க ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவு
மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை, உயர் அதிகாரி விசாரிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை: ராமநாதபுரம் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி உயர் அதிகாரி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம், சேதுபதி நகரைச் சேர்ந்த ராஜூ என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பிரிட்ஜோவை சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை வீரர் யார் என்பதைக் கண்டறிந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து தண்டிக்க வேண்டும் எனவும், இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க மத்திய மாநில அரசிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது, அப்போது, பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க ராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி ரவிசந்திரன் விசாரிக்க உத்தரவிட்டது.
மேலும் 6 மாதத்தில் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் டிஎஸ்பிக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்தக் கடல் எல்லையில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதைக் கண்டறிய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு, தமிழக மீனவர் பிரிட்ஜோ கொலை வழக்கை முடித்து வைத்தது.