தமிழக பெண்கள் சிறைகளை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்த அறிக்கை தேவை- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகளை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று அகில இந்திய சிறை தீர்த்திருத்தக் குழு அறிக்கை வெளியிட்டது. இதன் அடிப்படையில் சென்னை ஹைகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது தமிழகத்தில் உள்ள பெண்கள் சிறைகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழுவுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது.

இதன்படி சட்டப்பணி ஆணைக்குழுவை சேர்ந்த நீதிபதிகள் சிறைகளை ஆய்வு செய்து சில பரிந்துரைகளுடன் அறிக்கையை தாக்கல் செய்தார்கள். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பல பரிந்துரைகளை தமிழக அரசு அமல்படுத்திவிட்டது. எனினும் சில பரிந்துரைகளை அமல்படுத்தாமல் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலாளர், நீதிபதி டீக்காராமன், அரசு துறை செயலாளர்களை அழைத்து, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஏற்கனவே செய்யப்பட்ட பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் சிறைகளை அந்தந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள், தலைமை மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கையை ஹைகோர்ட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 25 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications