வந்தாச்சு தேர்தல்... ஜெ., கருணாநிதிக்கு நவீன வசதிகளுடன் ரெடியாகும் பிரச்சார வாகனங்கள்
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர்களின் நேர்காணல் என முடித்து விட்டு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகள் வெளியிட அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர்.
ஒருபக்கம் அக்னி வெயில் அனலை கக்கிவருகிறது, மறுபக்கம் அரசியல் களமும் தகிக்க ஆரம்பித்து விட்டது. எப்போது என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தேர்தல், மே 16 என்று அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்கு இன்னமும் 72 நாட்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினரும் அடுத்த கட்ட பணிகளை செய்ய தயராகிவிட்டனர்.

வேட்பாளர் பட்டியலை அறிவித்த கையோடு, தமிழகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக கோயம்புத்தூரில், .கோவையில் அரசியல் தலைவர்களுக்காக நவீன வசதிகளுடன் தேர்தல் பிரச்சார வாகனங்கள் தயாராகின்றன.
வெயில் உக்கிரத்தை காட்டும் இந்த நேரத்தில் வெயிலைப் பற்றி கவலைப்படாமல் வாக்கு வேட்டைக்காக ஊர் ஊராக சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்யும் அரசியல்கட்சி தலைவர்களின் நிலைமை கடினமான ஒன்று. இதற்காகவே சொகுசான குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பிரசார வேன்கள் தயாராக தொடங்கிவிட்டன. இவை கோவை சிவானந்தா காலனியில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் தயாராகி வருகின்றன.
ஜெயலலிதா பிரச்சார வேன்
ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்துக்காக நவீன வசதிகளுடன் வேன் ஒன்று தயாராகிறது. இந்த வேனில், 12 பேர் பயணிக்கலாம். இதன் முன்புற இருக்கைகள் சுழலும் வகையிலும், மேலும், கீழும் இயங்கும் வகையில் ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது.
திமுக தலைவர்களுக்கு வேன்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மற்றும் தி.மு.க. கூட்டணியில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பிரசார வாகனங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றது.
கருணாநிதி வேன்
திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்யும் வேனில், சக்கர நாற்காலியை எளிதாக ஏற்றி, இறக்கவும், 26 பேர் அமர்ந்து செல்லும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நவீன வசதிகள்
இந்த வாகனங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மைக்ரோவேவ் ஓவன், குளிர்சாதன பெட்டி, கட்டில், மெத்தை, சிகையலங்கார அலமாரி, ஏ.சி, எல்.இ.டி. டிவி, வெஸ்டன் மாடல் கழிவறை, குளியல் அறை, நீர் சேமிப்பு தொட்டி என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் படுத்து ஓய்வு எடுக்கும் வகையில் இருக்கைகளையே படுக்கையாக மாற்றும் வசதியும் செய்யப்படுகிறது. இந்த வாகனங்கள் இன்னும் சில நாட்களில் தயார் நிலைக்கு வந்துவிடும்.
இந்த வேனில் ஏறி எனதருமை வாக்காளப் பெருமக்களே என்று வசனம் பேச ஆரம்பித்துவிடுவார்கள் அரசியல் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications